அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட 150 மணித்தியால இரண்டாம் மொழியான சிங்கள மொழிக் கற்கைநெறியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (08.08.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. N. உமாநாத் மற்றும் வளவாளர் திரு. அ. சிறிரஞ்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதிதிகளின் வரவேற்பைத் தொடர்ந்து, 150 மணித்தியால கற்கைநெறியை நிறைவுசெய்த உத்தியோகத்தர்கள் தாம் கற்றுக்கொண்ட சிங்கள மொழித் திறனையும் பெற்றுக்கொண்ட அறிவையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள், நாடகங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளை சிங்கள மொழியில் சிறப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், இக்கற்கைநெறியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் தாம் பெற்றுக்கொண்ட மொழித் திறனை தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
பல அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக சுமார் மூன்று மாதங்களாக இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், 150 மணித்தியாலங்கள் என்பது ஒரு மொழியில் முழுமையான தேர்ச்சியைப் பெறுவதற்குப் போதுமான காலப்பகுதி அல்ல என்றபோதிலும், உத்தியோகத்தர்கள் தமது இயலுமைக்கு ஏற்ப சிறப்பாகப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மொழியைக் கற்றுக்கொள்வதுடன் அதனை நிறுத்திவிடாமல், நடைமுறை வாழ்க்கையிலும் அலுவலகச் சூழலிலும் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே மொழித் திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். மேலும், அரச அலுவலகங்களில் சிங்கள மொழியைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உத்தியோகத்தர்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன், இதுவரை இப்பயிற்சியைப் பெறாத அரச உத்தியோகத்தர்களையும் இணைத்துக்கொண்டு புதிய பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எனவும், ஏற்கனவே பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் தமது அறிவையும் திறன்களையும் மீளாய்வு செய்து மேம்படுத்திக்கொள்ளும் வகையில் மீளாய்வு ஒன்றினை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இப் பயிற்சித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர், வளவாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசாங்க அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். தேசிய அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இக் கற்கைநெறியில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 102 உத்தியோகத்தர்கள் தடைதாண்டலில் பூர்த்தி செய்து இவ் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






