“சிறுவர் உரிமைகள் மற்றும் தரமான கல்வியை சிறுவர்கள் பெறுவதை உறுதி செய்தல்” எனும் தொனிப்பொருளில், தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (11.08.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. யாழ். சமூக செயற்பாட்டு மையம் (JSAC), தீவக வலயக் கல்விப் பணிமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் வளங்கள் மற்றும் வசதிகள் குறைந்த கல்வி வலயங்களில் ஒன்றாக தீவக கல்வி வலயம் காணப்படுவதுடன், அங்குள்ள பல பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டமும் குறைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 446 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வளப்பங்கீட்டு அடிப்படையில் குறைந்தளவு வளங்களைப் பெறும் வலயங்களில் தீவக கல்வி வலயமும் ஒன்றாக விளங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக, குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பல பாடசாலைகள் தீவகப் பிரதேசத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், தீவகப் பிரதேசத்தின் தனித்துவமான சமூகச் சூழல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிபர்களும் ஆசிரியர்களும் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடல் கடந்து பாடசாலைகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலையும் இருப்பதாகவும் தெரிவித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பாடசாலைகளை சிறந்த முறையில் நிர்வகித்து, ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆளுமை வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திறன்களை மேம்படுத்துவது அதிபர்களின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
இதேவேளை, புங்குடுதீவு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாணவர்களை சாரணர் இயக்கத்தில் இணைத்து, அவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அரசாங்க அதிபர் பாராட்டினார். தொடர்ந்து அனைத்து பாடசாலைகளிலும் சாரணர் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை என்பது மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் இடம் மட்டுமன்றி, அவர்களின் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கியமான நிறுவனமாகும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடியவர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைகளே ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது தீவகப் பிரதேசத்தில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், இம்மாற்றங்களை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பணிக்காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, பாடசாலை நிர்வாகத்திலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அதிபர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இச் செயலமர்வை ஏற்பாடு செய்த யாழ். சமூக செயற்பாட்டு மையத்திற்கும் (JSAC) நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர், தீவக கல்வி வலயத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. து. லெனின் அறிவழகன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் திரு. த. கனகராஜ், கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பா. தனபாலன், யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. கு. கமலநாதன், தீவக வலய உடற்கல்வி மற்றும் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9