அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதிக்கும் வகையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி, கௌரவ பிரதமர், கௌரவ பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர், இன்று (17.08.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து, தமது மகஜரை கையளித்தனர்.கையளிக்கப்பட்ட மகஜர், உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






