வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்று வரும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ. சோதிநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவின் இரண்டாவது நாளிலும் வடக்கு மாகாணத்தின் பாரம்பரியத்தையும் பண்பாட்டு தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக, பாரம்பரிய நாட்டிய மற்றும் நடன நிகழ்வுகளுடன், மக்களின் பாரம்பரிய வாழ்வியலோடு தொடர்புடைய வீரதீர விளையாட்டு நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. உள்ளூர் உணவு வகைகள், பாரம்பரிய கலைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் ஊடாக யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






