யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (28.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்சந்தையை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர், மாவட்டத்தில் நல்ல ஊதியத்துடன் கூடிய ஏராளமான தனியார் தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், அவை தொடர்பான தகவல்கள் உரிய இளைஞர், யுவதிகளை முழுமையாகச் சென்றடைவதில்லை எனத் தெரிவித்தார். இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் தொழிற்சந்தையின் மூலம் அதிகளவான இளைஞர், யுவதிகள் பயனடையும் வகையில் அவர்களின் விபரங்களை முன்கூட்டியே திரட்டி, தொழில் வாய்ப்புகளுடன் அவர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். தொழில் நாடும் இளைஞர், யுவதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாக தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்யுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். இணையவழிப் பதிவை மேற்கொள்ள முடியாதவர்கள் மாவட்டச் செயலகம் அல்லது தத்தமது பிரதேச செயலகங்களில் இயங்கும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு பிரிவுகளில் நேரடியாகத் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகளின் தொழில் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்களது கல்வி, திறமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை அடையாளம் கண்டு வழங்குநர்களுடன் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இத்தொழிற்சந்தை அமையவுள்ளது என மேலும், அரசாங்க அதிபர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சந்தையில் நிதி நிறுவனங்கள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல், ஹோட்டல் துறை, கணக்கியல், ஆடை உற்பத்தி, பாதுகாப்புச் சேவை, தாதியர் சேவை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், உயர்கல்வி வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் - கணினித் துறை, தாதியர் பயிற்சி நெறிகள், ஏனைய தொழிற்பயிற்சி நெறிகள், கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அவற்றின் ஊடாக தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. க. கருணாகரன், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






