யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் புத்தாக்கச் சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் தொழில்முனைவுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தேசிய மட்டத்திலான அங்கீகாரம், வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அதற்கான முதலாவது களமாக இன்றைய கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் புத்தாக்க ஆற்றல்களை ஒருங்கிணைத்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்த காலத்திலிருந்தே பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்க முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதுடன், தற்போதும் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தமது படைப்பாற்றலையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். எனினும், இவ்வாறான பல புத்தாக்க முயற்சிகள் பாடசாலை அல்லது சமூக ஊடக மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, அவற்றை முறையாக அடையாளம் கண்டு, ஆவணப்படுத்தி, தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான வழிகாட்டல்களை வழங்கி, தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதுடன், சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் உற்பத்திகளாகவும் சேவைகளாகவும் மாற்றுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், புத்தாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தகவல்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக Google Form மூலம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் மாவட்டத்தில் காணப்படும் புத்தாக்க ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவற்றை உரிய நிறுவனங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் இணைப்பதுடன், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தொழில்நுட்ப வழிகாட்டல், பயிற்சி மற்றும் ஆதரவு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், புத்தாக்கங்களை விருத்தி செய்தல், வணிகமயமாக்கல், மதிப்புக்கூட்டல், வர்த்தகப் பெயராக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற துறைகளில் உரிய வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம், இளைஞர்களின் படைப்பாற்றலை புதிய தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் காணப்படும் திறமைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு வளர்த்தெடுத்து, அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளுடன் இணைப்பதன் மூலம், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பங்களிப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் புத்தாக்க ஆர்வலர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதன் மூலம், யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் புத்தாக்க ஆற்றல்களை தேசிய மட்டத்தில் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரி கலாநிதி முதித டி. செனரத் யாவா, சிரேஷ்ட உத்தியோகத்தர்களான திடாசி தஹாநாயக்க, நவோடி விக்ரமசிங்ஹ மற்றும் புத்தாக்க உத்தியோகத்தர் லயந்தினி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய புத்தாக்க முகவராண்மையின் சேவைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு வாய்ப்புகள் தொடர்பில் விளக்கங்களை வழங்கினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புத்தாக்கச் செயற்பாடுகளை தேசிய மட்டத்திலான புத்தாக்க முயற்சிகளுடன் இணைத்து, அவற்றை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தில் காணப்படும் புத்தாக்கச் சிந்தனைகள், ஆய்வுகள், புதிய தொழில்நுட்ப முயற்சிகள், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் தொழில்முனைவுகளை முறையாக அடையாளம் கண்டு, அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டல், தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவற்றை உரிய அரச நிறுவனங்கள், தேசிய மட்டத்திலான புத்தாக்க அமைப்புகள் மற்றும் ஏனைய ஆதரவு நிறுவனங்களுடன் இணைத்து தேசிய மட்டத்திற்கு உயர்த்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், இக்கலந்துரையாடலின் முதலாவது அமர்வாக, இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான புத்தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் புத்தாக்க ஆற்றல்களை ஒருங்கிணைத்து, தேசிய புத்தாக்கச் சூழலமைப்புடன் இணைப்பதற்கான முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கையாக இக் கலந்துரையாடல் அமைந்துள்ளது. இன்றைய கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர், விதாதா வள நிலைய மாவட்ட உத்தியோகத்தர், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்துறைத் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.






