இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், "மாவட்ட தொழில் சந்தை" தொடர்பான இணையவழி நிகழ்நிலைக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.10.2021) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டு " இளைஞர்கள் தற்கால அசாதாரண சூழலில் இத்தகைய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி தமக்கான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்" எனத்தெரிவித்தார்.
மேலும் இக் கலந்துரையாடலில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர், தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் தேடுநர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொழில் வழங்கும் நிறுவனங்களில் காணப்படுகின்ற நூற்றுக்கும் அதிகமான வெற்றிடங்களை பூர்த்திசெய்யும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதோடு நூற்றுக்கும் அதிகமான தொழில் தேடுநர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






