உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த புதன்கிழமை (03.11.2021) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கடற்தொழில் அமைச்சர் கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அனுரத்த ஹேரத் அவர்களும் கலந்துகொண்டதோடு,அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் திரு.கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்த்தன, வட மாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துல சேன ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்கள்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக காணிகளற்ற 186 குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலதடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துடன், வட மாகாண சுகாதார தொண்டர்களின் நியமனம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக சாதமாக பரிசீலித்து வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள், வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை கருத்திற்கொண்டு இவ் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள உறுதுணையளித்த அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற 186 குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை வழங்க உதவிய கௌரவ கடற்றொழில் அமைச்சர், கௌரவ இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.







