யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று, டெங்கு ஒழிப்பு மற்றும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றால் ஏற்பட கூடிய அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட மட்ட செயலணியின் கூட்டம் 23.11.2031 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த செயலணி கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஏற்படக்கூடிய டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.மேலும் மார்கழி மாதம் 6ஆம் திகதி தொடக்கம் ஒருவார காலத்திற்கு நுளம்பு ஒழிப்பு கட்டுப்பாட்டு வாரமாக செயற்படுத்த தீர்மானிக்கப்பப்டதுடன்,மாவட்ட மட்ட இன்றைய கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரதேச மற்றும் கிராம மட்ட கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ம.பிரதீபன், 51வது படைப்பிரிவின் இராணுவத் தளபதி மேஜர் சந்தன விக்ரமசிங்க, யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்முகராஜா, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள்,முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறியிடத்தக்கது.






