மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "சுரகிமு கங்கா" சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 26.11.2021 அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் திட்ட முன்மொழிவுகள், வழுக்கை ஆறு பிரதான கால்வாய் திட்டம் மற்றும் பினக்காய் குளம் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் சுரகிமு கங்கா
பிரதேச குழுக் கூட்டம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள், நிலத்தடி நீரை பாதுகாத்தல், உப்பு தடுப்பு அணைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறிய குளங்களை பேணிப் பாதுகாத்தலின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குறித்த திட்டத்துடன் தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்த வகையில் அமுல்படுத்தக் கூடிய மற்றும் பொருத்தமான திட்டங்களை முன்மொழிந்து சமர்ப்பிக்க அறிவுறுத்தல் வழங்கினார் . மேலும் இத்திட்டத்திற்கான தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள், நிலத்தடி நீரை பாதுகாத்தல் மற்றும் நீர் நிலைகளை பேணிப் பாதுகாத்தலின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் வெற்றி அளிக்கக்கூடிய திட்டங்களை முன்மொழிந்து சமர்ப்பிக்கும்பட்சத்தில் சுரகிமு கங்கா திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க முடியுமென ஆலோசனை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.






