இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள், பதினேழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சுனாமி அனர்த்தத்தினை இன்றையதினம் நினைவுகூறுகின்றோம். 2004 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் இவ் ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்றிருந்ததுடன், யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பிரதேசம் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டதுடன், காரைநகர் பிரதேசத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அனர்த்தம் தொடர்பாக நாம் முன்னாயத்தத்தோடு இருக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாவண்ணம் நாம் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்துகொண்டு கருத்துரைத்த மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தினால் யாழ்ப்பாணத்தில் 957 பேர் உயிரிழந்ததோடு இலங்கை முழுவதும் முப்பத்தையாயிரம் பேரிற்கு அதிகளவனோர் உயிரிழந்துள்ளார்கள். இன்று அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் காணப்பட்டாலும் அவ் ஆழிப்பேரலையால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து மீள முடியாதுள்ள நிலையில், கடலன்னையின் மடியில் மரணித்த உறவுகளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து ஆத்மாசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம் எனவும் தெரிவித்தார்.
மேலும்,சுனாமி ஆழிப்பேரலையானது தென்னாசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகளவான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,குறிப்பாக இலங்கையில் மாத்திரம் ஐந்துலட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, பல உயிரிழப்புகளை ஏற்படுத்தப்பட்டதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.என். சூரியராஜா தெரிவித்தார்.
இவ் தேசிய பாதுகாப்பு தின ஆத்மா சாந்தி பிராத்தனையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலாளர், பிரதம கணக்காளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.





