யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுடனான விஷேட கலந்துரையாடல் 31.01.2022 காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்துகொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில், அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கத்தோடு இணைந்து மேற்கொள்ளுவதோடு, எதிர்காலத்தில் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து திட்டமுன்மொழிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரின் ஊடாக உரிய அமைச்சுக்கு அனுப்புவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், யாழ்.மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளினைப் பயன்படுத்தி நீர்பாசனம் சார்ந்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தல், யாழ்ப்பாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்தல், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கல்வித்திட்டங்களினை அறிமுகம் செய்தல், கல்வி செயற்பாடுகளினை நவீன மயப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.






