யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கைத்தொழில் வர்த்தகத்துறை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.03.2022 அன்று மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களும், கடற்தொழில் அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டதோடு,மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், துறைசார் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இக் கலந்துரையாடலில் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கக்கூடிய பிரதேச செயலகங்கள் மூலம் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை, பல்வகைமைத்தன்மை ஏற்றுமதிகளை அதிகரித்தல், உற்பத்தியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுதல், சந்தை பல்வகைத்தன்மை, அந்நிய முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுமதி அபிவிருத்திக் கிராமங்கள், சதொசா விற்பனை நிலையங்களை விஸ்தரித்தல், உணவுத் தட்டுப்பாட்டுச் சவாலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 20 சதொசா விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கௌரவ வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்






