தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுப்படுத்துவதற்காக தளபாடங்கள், உபகரணப்பொருட்கள் மற்றும் சுழற்சி முறைக்கடனுக்குரிய காசோலை வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்திற்கான சந்தைப்படுத்தல் மேம்பாட்டிற்கான உதவிப்பொருட்கள் வழங்குதல் மற்றும் கட்டுமாணத்துறை சார்ந்த பொறி இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி நெறியின் அறிமுகநிகழ்வு (27) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுப்படுத்துவதற்காக தளபாடங்கள், உபகரணப்பொருட்கள் மற்றும் சுழற்சி முறைக்கடனுக்குரிய காசோலைகளை வழங்கி வைத்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய பங்காளி நிறுவனங்களின் அனுசரணையுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைபேறான மீள்குடியேற்றம் மற்றும் மீள்ஒருங்கிணைவுக்கான விரிவுபடுத்தப்பட்ட உதவித்திட்டங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் மூலம் தொழில்வாண்மையை விருத்தி செய்வதுடன் , வெளிநாடுகளுக்கு வேலைவாய்பிற்காக செல்பவர்கள் சட்டரீதியான அங்கீகாரத்துடன் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான திறன்களை விருத்தி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமென தெரிவித்தார். மேலும், கிடைக்கப்பெறும் இவ் உதவித்திட்டங்களூடாக சந்தர்ப்பங்களை உரியவாறு பயன்படுத்தி சவால்களை வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ரா.சசீலன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் N.S.R சிவரூபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன், IOM திட்ட இணைப்பாளர் ச.சுசீகரன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதி கு.காயத்திரி, அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் ந.தயாபரன் மற்றும் Hi Tech Lanka திட்ட முகாமையாளர் K.V. இந்திரகுமார் , மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்






