நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசியக்கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக "நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியானவர்களை கண்டறிதல்" தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 06.09.2022 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் 2022 ஆம் ஆண்டில்  24 ஆம்  இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தில் 7(1) பிரிவின் பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான அனைத்து நபர்களையும் கண்டறிய அரசு தீர்மானத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், அரசின் மூலம்  செயற்படும் சமுர்த்தி, முதியோர், அங்கவீனர், சிறுநீரக நோய் மற்றும் பொது நிதி போன்றவற்றிலோ அல்லது நலன்புரி நன்மைகள் போன்றவற்றின் கீழ் ஏற்கனவே பயன்பெறுபவராக இருப்பின் அல்லது பயன்பெற தகுதியானவர்கள் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் நிரந்தரமாக வசிக்கும் வசிப்பிடத்துடன் தொடர்புடைய கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஊடாக பிரதேச செயலகத்திற்கு 2022.09.30 ஆம் திகதிக்கு முதல் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.