யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட யாழ் பாரம்பரிய உணவுத் திருவிழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டாரத்தில் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேறுபட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுய முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் நாற்பதிற்கும் மேற்பட்ட கூடாரங்களில் கூழ்வகைகள் , இலைக்கஞ்சி ,பானங்கள், பலகாரங்கள், தீன்பண்டங்கள் , விழாக்கால விஷேட உணவுவகைகள் மற்றும் பற்பல சுவையான பாரம்பரிய உணவு வகைகள் போன்றன ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன் விசேட நிகழ்வாக பாரம்பரிய இசையினை கேட்டு இன்புற்றிட இசை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவின் முதல்நாள் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை பாா்வையிட்டதுடன் கலைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி வைத்தாா்.







