அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கையின் கரையோர பிரதேசங்களில் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சுனாமி அனர்த்த ஒத்திகை வேலை திட்டம்(IO WAVE -23) திருகோணமலை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை கொண்டு நடாத்தப்பட்டது. அதன் ஒரு செயற்பாடாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஆழிப்பேரலை முன்னாயத்தமும் சவால்களும் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (04) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், இலங்கையின் இட அமைவு, அதன் முக்கியத்துவம் , இயற்கை இடர் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த தயாா் நிலை, பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தங்களின் பாதிப்புகள் மற்றும் அவை தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சபை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து மழை காலத்தில் வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு முன்னாயத்த திட்டங்களை தயாரித்தல் வேண்டும். அத்தோடு வடிகால்களையும் துப்பரவு செய்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி பணிப்பாளர் (Dmc), யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாநாகர ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபையின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ பங்குதாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.






