உணவு பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.04.2024 காலை, மதியம் என இரு அமர்வுகளாக நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இலங்கையில் முதன் முதலில் எமது மாவட்டத்திலேயே உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு தொடர்பாக புள்ளி விவரங்களை சேகரித்து வைத்திருப்பதன் மூலம் எமது மாவட்டத்தில் உணவு பாதுகாப்பில் பின்தங்கிய கிராமம் மற்றும் போசனையற்ற உணவு பழக்கவழக்கமுள்ள பிரதேசத்தை இனங்கண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ள உத்தியோகத்தர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்றும் பதில் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகர் திரு.Dr.Buddagoda, உலக உணவு திட்ட அதிகாரிகள் திரு. நியூமத் மற்றும் திரு. அபேஷ், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.