யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்றைய தினம் (05.07.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் ,பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட து .

மேலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக 826 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் அகழ்ந்த சுண்ணாம்புக்கல்லை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியைப் பெறுதல், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல் மற்றும் வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வகையில் பெயர்ப்பலகைகளை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நயினாதீவு படகு விபத்து குறித்தும் அவ்வாறான விபத்து வரும் காலங்களில் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தற்போது அதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு அதற்கு கையாளவேண்டிய நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் குறித்த அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்ட நடவடிக்கைகள், விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந் துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்குமாகாண அமைச்சின் பிரதம செயலாளர் திரு.இளங்கோவன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மற்றும் மாகாண அமைச்சின் திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

1 2 3 4 5 6 7