பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (11.12.2024) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று தற்துணிவின் அடிப்படையிலும் செயற்பட்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாகவும், குறிப்பாக இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்ட சாவல்களுக்கு மத்தியிலும் கடும் முயற்சிகள் எடுத்துவருவது எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விடயம் எனத் தெரிவித்ததுடன், அவ் உபகரணங்களின் பாவனை தொடர்பாக பிரதேச செயலக ரீதியான கண்காணிப்பு அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன், வேலைத்திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிபர குடிசன தொகைமதிப்பிடும் கணிப்பீட்டில் காரைநகர், வேலணை, சங்கானை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்கள் முறையே இதுவரை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அஸ்வெசுமத் திட்டத்திற்குப் பொறுப்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
1 2 3