அனர்த்ததின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் 26.12.2024 காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி, சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையுரையுடன், அரசாங்க அதிபரால் சிறப்புரையாற்றப்பட்டது.
அரசாங்க அதிபர் தமதுரையில், இதே தினத்தில் 20 ஆண்டு பின்னோக்கிச் செல்லும் போது இலங்கை தேசம் உட்பட பலநாடுகள் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக பாரதூரமான இழப்புக்களை சந்தித்த நாளாகும் எனவும், இலங்கையில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள் எனவும், எமது மாவட்டத்தில் 1,005 பேரை சுனாமி ஆழிப்பேரலை காவுகொண்டுள்ளது எனவும், பாரியளவு சொத்தழிவுகள் ஏற்பட்டது எனவும், அதில் குறிப்பாக முழுமையாக 4,391 வீடுகளும், பகுதியளவில் 1,182 வீடுகளும் சேதமடைந்திருப்பதனை புள்ளிவிபரங்கள் தெரிவித்தாலும், அதற்கப்பால் இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீளமுடியாத துயரத்தில் உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், மருதங்கேணியில் மேற்படி சுனாமி ஆழிப்பேரலக்குப் பின்னரான நிலமைகளை நேரடியாக கண்டதாகவும், இறந்தவர்களின் உடல்களையும், மரண ஒலங்களைக் கேட்டதாகவும், இது இன்று வரை ஜீரணிக்க முடியாத சம்பவமாகவுள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இனிமேலும் இவ்வாறு நிகழாமலிருக்க விழிப்புணர்கள் தேவை என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சுனாமி ஆழிப்பேரலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமலிருக்க முன்னாயத்த பொறிமுறையினை அனைவரும் சேர்ந்து எடுத்து பொறுப்புக் கூறுபவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு காணோளி காட்சி ப்படுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.
 
3 4 5 6 8 9 10