யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் 35 வகையான போட்டிகள் நடைபெற்றமை சிறப்பான விடயம் எனவும், முதற்தடவையாக நீச்சல் போட்டிக்கான தெரிவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது எனவும் குறிப்பிட்டதுடன், இப் போட்டிகளில் 200 வரையான வீர வீராங்கனைகள் பரிசில்கள் சான்றுதழ்கள் பெறுவது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய ரீதியில் எமது வீர வீராங்கனைகள் சாதித்து வருவதாகவும், அந்த வகையில், உதைப்பதாட்டம் ஆண்கள் இம் முறையுடன் தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்றமை அதிசிறப்பான விடயம் எனவும், கூடைப்பந்தாட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தினையும், மெய்வல்லுநர் போட்டிகளில் கோலுன்றிப் பாய்தல் ஆண்கள் போட்டியில் திரு. ஏ. புவிதரன் மற்றும் பெண்கள் பிரிவில் என். டக்சிதா ஆகியோர் தேசியப் போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கமும், குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் திரு எஸ். மிதுன்ராஜ் இரட்டை வெள்ளிப் பதக்கங்களையும் தேசிய ரீதியாக வென்றுள்ளமையும், பளுதூக்கல் பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி உட்பட இரண்டு பதக்கங்கள், குத்துச்சண்டை ஆண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கமும் தேசிய ரீதியில் பெற்றமையினை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வசதி வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஆர்வத்தோடு பங்குபற்றும் சகல வீர வீராங்கனைகளின் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும், இரண்டாம் இடத்தினை பருத்தித்துறை பிரதேச செயலக அணியும், மூன்றாவது இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.






