சிறுவர்களை உடல் ரீதியான தண்டனையிலிருந்து தடுப்பது மற்றும் அவர்களிடத்து நேர்மறையான ஒழுக்க அணுகுமுறைகளை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய(04.03.2026) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிபர்களையும் ஒருங்கிணைக்கின்ற சந்தர்ப்பம் இச் செயலமர்வின் மூலம் கிடைத்துள்ளதுடன், பாடசாலை காலங்களை நினைவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைந்திருப்பதனால் அனைவரும் பாடசாலை காலங்களில் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்த நினைவுகளை ஞாபகப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பாடசாலையில் அதிபரின் பங்கு முதன்மையானது முக்கியத்துவமானதாக காணப்படுவதாகவும், சமூகத்தின் முழுமையான கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு அதிபரிடமே உள்ளதாகவும், ஒவ்வொரு பிள்ளையின் கல்வி மேம்பாட்டினை ஏற்படுத்தும் பொறுப்பு பாடசாலையை வழிப்படுத்தும் தலைமை பொறுப்பும் அதிபரிடமே காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்களை மட்டும் அல்லாமல் அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வைத்து நடாத்தும் பொறுப்பும் அதிபரிடமே காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் ஒரு சமூக கட்டமைப்பை ஆற்றுப்படுத்தி நல்வழிப்படுத்தும் தலையாய பொறுப்பு அதிபரிடமே காணப்படுவதாகவும், குறிப்பாக பாடசாலை கல்வியானது அந்த காலத்தில் இருந்த நிலையும், இன்று இருக்கின்ற நிலையும் பாடசாலை உட்புற சூழல் நிலையும், சற்று வேறுபட்டதாக காணப்படுவதனை பல இடங்களில் அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும், பெற்றோரின் பங்களிப்பு என்பது பாடசாலை நிர்வாகத்துக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிள்ளைகளின் வளர்ச்சி மேம்பாடு அல்லது அவர்களின் குறைபாடு தொடர்பாக பெற்றோரை அழைத்து அது தொடர்பாக தெளிவுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளதாகவும், பாடசாலைப் பிள்ளைகள் சமூக பொருளாதார - பின்புல கட்டமைப்புகளோடு வருகின்ற பிள்ளைகளை ஆற்றுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு அதிபர்களிடத்தே காணப்படுவதாகவும், அன்று ஆசிரியர்களால் மாணவர்களுக்கு உபயோகித்த தண்டனைகளை இன்று பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், அவ்வாறான நிலையில் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக காணப்படுவதாகவும், அரசாங்கத்தாலும் சட்டத்தாலும் கடமைக் கூறுகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு விடயங்களை உள்வாங்கி ஆசிரியர்கள், பிள்ளைகளை ஆற்றுப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான அதிபராக வளர்வது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்ததுடன், அது தொடர்பாக கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பாடசாலை நிர்வாக கட்டமைப்பை அரவணைத்து மனிதநேய, பிள்ளைநேய ஆசிரியர் நேய எல்லோரும் நேசிக்க தக்க வகையிலே பாடசாலை கட்டமைப்பை எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பாக செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வி மேம்பாட்டு நிலைமைக்கு காரணகர்த்தாவாகவும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன் நின்று செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வித்திணைக்களம் ஆகியன இணைந்து அதிபர்களுக்கான இச் செயலமர்வு இதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம், உடல் ரீதியான தண்டனையின் உடல், மன மற்றும் சமூக விளைவுகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அதற்குப் பதிலாக நேர்மறை ஒழுக்க முறைமைகள் தொடர்பிலும், பிள்ளைகளை ஆற்றுப்படுத்துதல் தொடர்பிலும் விளக்கமாளிக்கப்பட்டதுடன், சிறுவர்களின் உறவை வலுப்படுத்தும் தொடர்பு திறன்கள், மனஅழுத்தக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான சட்டக் கண்ணோட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன. இச் செயலமர்வில் சட்டத்தரணி திரு. ஜெ.தற்பரன், மாவட்ட உளநல வைத்திய நிபுணர் கனகரத்தினம் சிவதாஷ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், கல்வித்திணைக்கள அதிகாரிகள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9