இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (07.08.2026) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் (Payments and Settlements Department) சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர்களான ஜி. கே. மொஹொட்டி மற்றும் ஏ. எஸ். எம். பி. எம். பி. அகலவத்த ஆகியோருடன், பிராந்திய முகாமையாளர் எஸ். பகீரதி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச் செயலமர்வில், தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், திறன்மிக்க சேவை வழங்கலுக்கும் முக்கிய பங்காற்றுவதாகக் தெரிவித்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமானவை, பாதுகாப்பானவை, வெளிப்படைத்தன்மை கொண்டவை என்பதுடன், பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இலகுவான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
அரசின் கொள்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு மற்றும் "கிளீன் ஸ்ரீலங்கா" ஆகியவை முக்கிய செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும், அனைத்து அரச திணைக்களங்களும் தங்களது கொடுப்பனவு மற்றும் வரவு செலவுத் தொடர்பான நடவடிக்கைகளை படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அரசிற்கு செலுத்தப்படும் பல்வேறு கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன என்றும், பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே காலத்தின் தேவையாகும் எனவும், இதற்காக அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் மத்திய வங்கியின் உத்தியோகத்தரான மாலினி அச்சுதன் அவர்கள் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகள், அவற்றின் பாதுகாப்பு, பயன்பாட்டு முறைகள் மற்றும் பொதுமக்கள் பெறும் நன்மைகள் தொடர்பாக முன்வைப்பு மூலம் விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன், மாவட்டச் செயலக வளாகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அமைத்திருந்த தகவல் நிலையங்கள் ஊடாக டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகள் தொடர்பான விளக்கங்களும், நடைமுறை வழிகாட்டல்களும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டன.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14