வட மாகாண கடல்சார் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.08.2022) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இணையவழி நிகழ்நிலை மூலம் கலந்துகொண்டார். அத்தோடு கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர்கள் மற்றும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
கடற்தொழில் அமைச்சினால் உலக வங்கியின் நிதி அனுசரணையில் வடக்கு மாகாண கடல்சார் அபிவிருத்தி செயற்திட்டம் நடைபெறவுள்ளது. இவ் அபிவிருத்தி செயற்திட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடல்வளங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அபிவிருத்தி செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இக் கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கடல் வளங்கள் காணப்படுகிறது. அவற்றை பொருளாதார ரீதியாக பயன்படுத்துதல் மட்டுப்பாடாகவுள்ளது. அதனை நிலைபேண்தகுவகையில் பயன்படுத்துதல் வேண்டும். இக் கடல்வளத்தை அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாயத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்தல் வேண்டும் அத்தோடு கடல்சார் அபிவிருத்தி செயற்திட்டத்தை சரியாக ஆராய்ந்து சூழலை பாதிக்காத வகையில் மேற்கொள்வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது






