வடக்கு மாகாணத்திற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை உருவாக்கம் தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (08.06.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அனுசரனையுடன் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமானது வடக்கு மாகாணத்திலுள்ள அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை உருவாக்கும் செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதற்காக துறைசார் வல்லுநர்களின் மேலதிக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை உள்வாங்கி அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை வரைபினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உளநலப்பிரிவு வைத்தியர்கள், சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், சமூகவியல் துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






