யாழ்ப்பாண மாவட்டத்தில் வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரனையின்கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை 01.02.2024 ஆம் திகதி முதல் 02.02.2024 ஆம் திகதி வரை யாழ் மாவட்ட நோர்த் கேட் (North Gate)தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் அவர்களும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்களும் கலந்து கொண்டதோடு ஊடகவியலாளர்களுக்கு பயனுறுதிமிக்க ஊடகம்சார் விழுமியக் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்கள்.
அத்தோடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், வெளிநாட்டு செய்தி பகுப்பாய்வாளருமான மோகான் சமரநாயக்க, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின்
ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நயனா சுரவி, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் கே.பி ஜயந்த், வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி, வெகுசன ஊடக அமைச்சின் சட்ட அதிகாரி திருமதி. யுரேகா வேலாரத்ன, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடகப் பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இப் பயிற்சிப்பட்டறை திறம்பட முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம், போலித்தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனியுரிமை பற்றிய சட்டப்பார்வை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இப் பயிற்சிப்பட்டறை யில் வடமாகாண ஊடகவியலாளர்களும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதோடு, அவர்களுக்கு குறித்த பயிற்சிநெறிக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.





