அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது யாழ்ப்பாண வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.01.2025) மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஒரு போட்டியில் வெற்றி தோல்வியினைக்காட்டிலும், அப் போட்டிகளில் பங்குபற்றுவதே பாராட்டத்தக்கவிடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டார். மேலும், போட்டித்தன்மை இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது எனவும், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவதன் ஊடாக நல்ல மனப்பாங்கு உருவாவதற்கும், நேரமுகாமைத்துவம் பேணுவதற்கும் மற்றும் அர்ப்பணிப்பாக செயற்படுவதற்கும் துணை நிற்கும் எனவும் குறிப்பிட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 23.11.2024 அன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும் , அரசாங்க அதிபரின் மெச்சுரையும் வழங்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும், கலப்பு போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கும் அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது.
மேலும், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதனை முன்னிட்டும் அரசாங்க அதிபர் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், மேலதிக மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.







