யாழ்ப்பாண மாவட்ட செயலக சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஆதரவை மேம்படுத்தும் செயற்திட்டம்(ESPD) தொடர்பான கலந்துரையாடல் (30.01.2024) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட ரில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களமும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களமும், JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய நபர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்தவருடம் பதினொரு இயலாமைக்குட்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், JICA நிறுவன பிரதிநிதி, மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட செயலக இணைப்பாளர், யாழ் மாவட்டத்தில் பிரதேச செயலகரீதியாக தெரிவு செய்யப்பட்ட அங்கவீனர்கள் ,தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு 04.02.2024 காலை 8 மணிக்கு "புதிய தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, மற்றும் மரநடுகை நிகழ்வுகள் உள்ளடங்கலாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது " எமது நாடு எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து சமூக பொருளாதார பண்பாட்டு சரிவுகளிலிருந்து நாட்டை நேர் நிறுத்தி அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்னேற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் பொறுப்பு இன்றியாதது. ஆதலால் "புதிய தேசம் அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் 76ஆவது சுதந்திர தினத்தில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்ப கிராம மட்டத்திலிருந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், 512 உப கட்டளைத் தளபதி பிரிகேடியர் லக்ஸ்மன் சமர திவாகர, காங்கேசன்துறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் விஜயவர்த்தன மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விமானப்படை பிரதிநிதி , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி.பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தலைவர் திரு.கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஜ் மற்றும் சாகித்ய ரத்னா திரு.கனகரத்தினம் சட்டநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர்களின் மங்கள வாத்தியங்களுடன் யாழ். நாச்சிமார் ஆலயத்திலிருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றலுடன், தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வணக்கம் இசைக்கப்பட்டது.
மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையால் "யாழ்ப்பாணம் 02" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மூத்த கலைஞர்களுக்கு "யாழ் முத்து"விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு, யாழ்ப்பாண மாவட்ட இளங்கலைஞர்களும் விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், இந் நிகழ்வில் மங்கல இசையினை என்.ஆர்.கே.இரத்தினகுமார் குழுவினரும், வரவேற்பு நடனத்தை தெல்லிப்பழை கலாசார மத்திய நிலைய மாணவிகளும், வீணாகானத்தை அனுராகம் கவின்கலை நிலைய மாணவர்களும், மயில் நடனத்தை நீர்வையூர் பொன்சக்தி கலாகேந்திரா மாணவிகளும், உறைந்த புலரி நாடகத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களும் மேற்கொண்டார்கள்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையினர், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரனையின்கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை 01.02.2024 ஆம் திகதி முதல் 02.02.2024 ஆம் திகதி வரை யாழ் மாவட்ட நோர்த் கேட் (North Gate)தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் அவர்களும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்களும் கலந்து கொண்டதோடு ஊடகவியலாளர்களுக்கு பயனுறுதிமிக்க ஊடகம்சார் விழுமியக் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்கள்.
அத்தோடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், வெளிநாட்டு செய்தி பகுப்பாய்வாளருமான மோகான் சமரநாயக்க, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின்
ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நயனா சுரவி, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் கே.பி ஜயந்த், வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி, வெகுசன ஊடக அமைச்சின் சட்ட அதிகாரி திருமதி. யுரேகா வேலாரத்ன, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடகப் பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இப் பயிற்சிப்பட்டறை திறம்பட முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம், போலித்தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனியுரிமை பற்றிய சட்டப்பார்வை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இப் பயிற்சிப்பட்டறை யில் வடமாகாண ஊடகவியலாளர்களும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதோடு, அவர்களுக்கு குறித்த பயிற்சிநெறிக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட Deputy Inspector General of Police M.R.Manjula Senarath அவர்கள் கொழும்புக்கு இடம்மாற்றலாகி செல்வதன் பொருட்டு மரியாதை நிமித்தமாக 26.01.2024 அன்று பிற்பகல் 4.15 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் இடம்மாற்றலாகி செல்லும் பொலிஸ் அத்தியட்சகரை நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி மாவட்ட செயலாளர், பிரதம கணக்காளர் ஆகியோா் கலந்து கொண்டனர்.





