கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (21.03.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடல்வழி போக்குவரத்து ஊடாக மேற்கொள்ளப்பட்ட திருவிழா ஒழுங்கமைப்பிற்கும் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய நெடுந்தீவு பிரேதச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்துகின்ற செயற்பாடாக இது அமையும் எனவும், அந்தவகையில் நெந்தீவு பிரதேச செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் கடற்படையிரின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்திருந்தனையும் குறிப்பிட்டதுடன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு பிரதேச சபையினர், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பிற்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
மேலும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பிற்கும் தமது நன்றியினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் அலுவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படது.
1.அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் மேலும் வினைத்திறனாக செயற்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் ஆனி 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை மே 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடாத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அரசாங்க அதிபர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
3.பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 ற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புக்கள், இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்திற்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.
4.ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட அரசாங்க அதிபர் சித்திரை மாதம் முதல் வாரத்திலிருந்து செயற்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டு அதன் முன்னேற்றத்தினை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
5.மாணவர்களின் இடைவிலகல் தொடர்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதனை பாராட்டிய அரசாங்க அதிபர் அவர்கள் மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கேட்டுக் கொண்டார்.
6.பதிவு செய்யப்படாத பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக சில பிறப்புச் சான்றிதழ்களை பதிவிடவே முடியாத நிலை நீடித்துவருவதற்கு ஓர் தீர்க்கமான முடிவு காணுமுகமாக மாவட்டச் செயலகத்தில் ஆனி மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நடமாடும் சேவைக்கு முன்பதாக, ஆனி மாதம் முதலாம் திகதி அச் சிறுவர்களின் சகல விபரங்களையும் பிரதி பதிவாளர் நாயகத்திடம் கையளித்து, அதன் பிரதியினையும் தனக்கும் அனுப்பி வைக்குமாறும், நடமாடும் சேவையில் அப் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழை பதிவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரசன்னமும் இருத்தல் வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
7.மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்லமுடியாது என்ற விழிப்புணர்வு செயற்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
8.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றம் நகர்புற பாடசாலை மாணவர்கள் பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கு அமைய, பொலிஸ் நடவடிக்கைக்கு ஆவன செய்வதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
9.யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பதாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
10.தாய் தந்தை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000.00 ரூபா வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000.00 ரூபா வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் அவர்கள் பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவினை பெறுவதற்கு நீதிமன்ற கட்டளை பெறவேண்டும் எனவும் தெரிவித்தத்திற்கு அமைய, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டடு, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையினை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறன் நபர்களுக்கான மாவட்ட மட்ட வழி நடத்தல் குழுக்கூட்டம் (Jaffna District Steering Committee Meeting) யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாற்று திறனாளிகள் இயலாதவர்கள் என்ற சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், மக்களின் மனங்களில் இது தொடர்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் வழங்குவதில் வினைத்திறனாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அடுத்த மாவட்ட வழி நடத்தல் குழுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் அதிகளவு பிதிபலிக்கும் வகையில் அவர்களின் வகைரீதியாக உள்ளவர்களை அதிகளவு உள்ளடக்கி அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை இனங்காண வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வசதியளிப்பதற்கும் மாவட்டச் செயலகத்துடன் இணைந்த வகையில் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து செயற்பட்டுவருவதற்கும் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாகாண சமூக சேவைகள் உதவிப்பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன், FAIRMED நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி மற்றும் மாவட்ட பிரதிநிதி. சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. தி. உமாசங்கர்,
மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் , தலைமை பீட உத்தியோகத்தர், கல்வி , சுகாதாரம், உள்ளுராட்சி துறை சார் மாவட்டப்பிரதிநிதிகள் , சிறுவர் நன்னடத்தை , கிராம அபிவிருத்தி துறை சார் மாவட்ட உத்தியோகத்தர்கள் , மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

பெண்களுக்கான மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் பயிற்சி நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்டச் செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் பயிற்சி நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றுவதில் மோட்டாா் சைக்கிள் முக்கியமானதாக மாறிவிட்டது எனவும், ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள் பயன்படுத்துவோரில் பெண்களே அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தாா். மேலும், இது தொடர்பிலாக ஓரளவு தெளிவு இருந்தாலும் இந்த மோட்டாா் சைக்கிள் பழுது பாா்த்தல் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பாக மேலதிக தெளிவுகளை முழுமையாக பெற்றுக்கொள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களை வினைத்திறனாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கான மோட்டாா் சைக்கிள் உதிரிப்பாகங்கள், தினசரி பாதுகாப்பு முறை, பரிசோதனை முறை, காலத்திற்கேற்ப பராமரிப்பு, மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பு எரிபொருள் மீதப்படுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் உதவி மாவட்ட செயலாளர் , டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் குழுமத்தினர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலக பெண் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் திணைக்களத்துடன் இணைந்த வகையில் கமநலசேவைகள் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்தவகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினை தான் நேரடியாக ஆய்வு செய்த போது பொதுமக்கள் பல கருத்துக்களை முன்வைத்தார்கள் எனவும், குறிப்பாக வெள்ளம் தரித்த இடத்தில் மதகு அமைத்திருந்தால் வெள்ளம் தரித்து நிற்காது என பல பெறுமதியான கருத்துக்களை முன்வைத்தார்கள் எனவும் குறிப்பிட்டதுடன், இதன் மூலம் வீதிப் புனரமைப்பிற்குசிறந்த பொறிமுறையின் அவசியம் கட்டாயம் தேவை எனவும், ஆதலால் அனைவரினதும் ஆலோசனைகளை கூட்டுப் பொறுப்புடன் இனி வருங்காலங்களில் வீதி புனரமைப்பு வேலைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய வீதிகளை இனங்காண்பதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டதுடன், பிரதேச செயலாளர்கள் புனரமைக்கப்பட வேண்டிய அனைத்துத் தர வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்த வகையில் சரியான முறையில் தயாரித்து வைக்குமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நிகழ்நிலையூடாக (Zoom) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளரும், நேரடியாக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளிட்ட தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.






