சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் (திட்டமிடல்) நிலந்த விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் ஆயிஷா சுபசிங்க, திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு எஸ். கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு எஸ். ஸ்ரீவாகீசன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என். பிரபாகர், இலங்கை இராணுவ யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக நிர்வாக அதிகாரி கேர்ணல் MACP மொறசிங்க, இலங்கை கடற்படை நெடுந்தீவு முகாம் பொறுப்பதிகாரி கப்டன் என். ரணவீர, 51ஆவது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரி லெப். கேர்ணல் விஜயவர்தன, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 9
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.22.46 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நெடுந்தீவில் விளையாட்டு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, திட்டமிடப்பட்ட பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் நிறைவேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திப் பணிகளுக்காக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ரூ.22.46 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இவ்விடயத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரட்ணாயக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே ஆகியோர் விசேட அக்கறையுடன் செயற்பட்டு, இந்த நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுப்பதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த நிதியின் மூலம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார். கிடைக்கப்பெற்றுள்ள நிதியை உரிய காலத்திற்குள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் திட்டமொன்றை அனைத்து தரப்பினரும் இணைந்து தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இவ்வாண்டு நெடுந்தீவுக்கு பல்வேறு துறைகளின் ஊடாக பெருமளவான நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகவும், குளிரூட்டப்பட்ட பயணிகள் படகுக்காக சுமார் ரூ.235 மில்லியன், கிராமப்புற வீதிகளுக்காக ரூ.40 மில்லியன், சமூக சக்தி அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.32 மில்லியன், வீடமைப்புத் திட்டத்திற்காக ரூ.34.60 மில்லியன், கடற்றொழில் அமைச்சின் திட்டங்களுக்கு ரூ.3 மில்லியன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மொத்தமாக சுமார் ரூ.408 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தினால் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகளை உரிய முறையில் பயன்படுத்தி, நெடுந்தீவு மக்களின் அவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அதிகபட்சமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள விளையாட்டு மைதானம் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், நெடுந்தீவில் இயங்கும் அனைத்து விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் பெருமளவு நிதி முதலீடு செய்யப்படும் இவ் அபிவிருத்திப் பணியின் முழுமையான பயன் நெடுந்தீவின் முழுச் சமூகத்திற்குகிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நெடுந்தீவு மக்களிடையே கரப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு காணப்படும் ஆர்வத்தை கருத்திற்கொண்டு, பொருத்தமான இடத்தில் தரமான விளையாட்டு மைதானத்தினை அபிவுருத்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது .இதன் மூலம் விளையாட்டு மைதானத்திற்குத் தேவையான மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பான சூழலில் விளையாட்டில் ஈடுபடக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். நெடுந்தீவுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் உரிய காலத்திற்குள் பயனுள்ள அபிவிருத்திப் பணிகளாக மாற்றப்பட வேண்டும். இதற்காக பிரதேச செயலகம், பாடசாலை நிர்வாகம், மாகாண அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என். பிரபாகர், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. லெனின் அறிவழகன், மாகாண கல்வித் திணைக்கள பொறியியலாளர் திருமதி எஸ். சரன்ஜா, பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். இராஜசீலன், நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் திரு. ஐ. தயாபரன், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக்கழக பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நலன்புரிக் கழகத் தலைவரும் மாவட்ட புள்ளி விபரத்திணைக்ககள பிரதிப்பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தனேசன் தலைமையில் இன்றையதினம் மு. ப. 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கடந்தகால பொதுக்கூட்ட அறிக்கையும், செயற்பாட்டு அறிக்கையும் நலன்புரிக்கழக செயலாளர் திருமதி. கி. தயாபரி அவர்களால் வாசிக்கப்பட்டு, அறிக்கைகள் பொதுச் சபையினால் ஏற்கப்பட்டது. கடந்தகால நலன்புரிக்கழக பொருளாளர் அறிக்கை பொருளாளர் திரு. உ. சுமன் அவர்களால் வாசிக்கப்பட்டு, அறிக்கைய பொதுச் சபையினால் ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போஷகர் உரை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் போஷகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 2025 ஜூன் 18ஆம் திகதி முதல் இன்றுவரை மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

மாவட்டச் செயலக ஊழியர்களின் நலன்புரியை முன்னிறுத்திச் செயற்படும் நலன்புரிச் சங்கமானது, அரச அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொறுப்புமிக்க அமைப்பு என்ற வகையில், மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாவட்ட செயலகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் குறித்த நினைவு முத்திரை வெளியிடப்பட்டமை அனைவருக்கும் பெருமைக்குரிய விடயமாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்தப் பணி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மிகச் சிறப்பாக முன்னெடுத்த 2025–2026ஆம் ஆண்டுக்கான நலன்புரிச் சங்க செயற்குழுவினருக்கு, சங்கத்தின் போஷகர் என்ற வகையில் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மருதங்கேணியில் சிறப்பாக நடத்தப்பட்டமைக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், ஆடிப்பிறப்பு, இரத்ததான நிகழ்வு, வெசாக், நவராத்திரி, ஒளிவிழா உள்ளிட்ட வழமையான நிகழ்வுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அடுத்த ஆண்டில் இப்தார் நிகழ்வையும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

25 வருட கால சேவையை நிறைவு செய்த ஊழியர்களையும், பரீட்சைகளில் சிறப்பாகச் சித்தியடைந்த ஊழியர்களின் பிள்ளைகளையும், தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த உத்தியோகத்த ர்களையும் கௌரவிக்கும் பணியையும் தொடர்ச்சியாக நலன்புரிச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். உற்பத்தித்திறன் பயிற்சியின் ஊடாக ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பும் பணிப்பொறுப்பும் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு காலகட்டத்தில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் உத்தியோகத்தர்களின் வருகை 38 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், தற்போது அது 92 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை அனைவரினதும் கூட்டு உழைப்பின் பெறுபேறாகும் எனத் தெரிவித்தார். இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து பேணுவதுடன், பொதுமக்களுக்கு சிறந்ததும் வினைத்திறனானதுமான சேவையை வழங்கும் நோக்கில் அனைவரும் மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இறுதியாக, கடந்த செயற்குழுவினரின் அர்ப்பணிப்பான பணிகளுக்கு நன்றியைத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிதாகப் பொறுப்பேற்கும் செயற்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் :

தலைவர்

திரு. வெ.றதீஸ் (கணக்காளர்)

செயலாளர்

திரு. க.கருணாகரன் ( மாவட்ட இணைப்பாளர், மனித வள அபிவிருத்தி )

உப தலைவர்

திரு. பா. ஜெயகரன் (மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி)

உப செயலாளர்

திரு. ரி.டி.ஜி.பிராங்கிளின் (இணைப்பாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு )

பொருளாளர்

திரு. இ. முருகதாஸ் (சமுர்த்திக் கணக்காளர்)

உதவிப் பொருளாளர் திருமதி.ரஜனி ( அபிவிருத்தி உத்தியோகத்தர், கணக்குகிளை)

நலன்புரிச் சேவைகள் செயலாளர்

திரு. தி. கணேஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர் - திட்டமிடல்கிளை )

விளையாட்டுச் செயலாளர்

திரு. எஸ். பிரசாத்

(மாவட்ட இணைப்பாளர், உற்பத்தி திறன் பிரிவு)

கணக்காய்வாளர்

திரு. எஸ். ரமேஸ்

(பிரதம உள்ளக கணக்காய்வாளர்)

உறுப்பினர்களாக : திருமதி. துளசி, திரு. சஞ்சுதன், திரு. கோகுலன், திருமதி.

சுலோசனா,திரு. சுரேஷ்குமார், திரு. அருள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இப் பொதுக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

1 2 3 4 5 6  7 8 9 11 12 13 14 15 16 17 19 

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை (Safe House) மேலும் வினைத்திறனுடன் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை தற்போதைய நிலை, அதன் சேவைகளைத் தொடர்ந்தும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள், நிர்வாக மற்றும் வளத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம்பெற்றன. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் மாவட்டச் செயலக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் சேவையின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அதன் சேவைகளை இடைநிறுத்துவதற்குப் பதிலாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, மாவட்ட நிர்வாகம் மற்றும் JSAC ஆகிய மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து காப்பகத்தின் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் பணியாளர் தொடர்பான பொறுப்புகளைத் தெளிவாக வரையறுத்து, வெளிப்படையானதும் சட்டபூர்வமானதுமான நடைமுறைகளை உருவாக்குவதன் மூலம் இல்லத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, தகுதியுடைய பெண்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பான சூழலையும், தேவையான பராமரிப்பு மற்றும் நலன்புரிச் சேவைகளையும் வழங்குவதற்கு அரச நிர்வாகத்திற்கும் JSAC நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். மேலும், பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் சேவைகளை மேம்படுத்துவதுடன், தேவையுடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் உரிய பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி. தயாபரி, JSAC நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் திரு. என். சுகிர்தராஜ், JSAC நிறுவனத்தின் ஆளுநர் சபையின் செயலாளர் திருமதி கோசலை மதன், உப தலைவர் திரு. கே. கௌதமன், JSAC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
‘நல்லைக்குமரன் மலர் 34’ (2026) வெளியீட்டு விழா இன்று (19.08.2026) புதன்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சைவ சமய விவகாரக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சைவ சமய விவகாரக்குழுவின் தலைவரும் யாழ்ப்பாண மாநகர ஆணையாளருமான திரு. டெ.க. அரவிந்தராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் கௌரவ (திருமதி) மதிவதனி விவேகானந்தராஜா சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,
“எமது தமிழர்களின் அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டம், தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் செறிந்து வாழ்ந்தாலும், தமிழர்களுக்கென தனித்துவமான அடையாளப் பிரதேசமாக விளங்குகின்றது. அதேபோன்று, யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாக நல்லூர் ஆலயம் திகழ்கின்றது. இந்துக்களினதும் சைவர்களினதும் முக்கிய திருத்தலமாக விளங்கும் நல்லூர் ஆலயம், ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கின்றது. அத்தகைய சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தை அடியொற்றிய வகையில் ‘நல்லைக்குமரன்’ மலர் தொடர்ந்து 34 ஆண்டுகளாக யாழ்ப்பாண மாநகரசபையினால் வெளியிடப்பட்டு வருவது உண்மையிலேயே வரலாற்றுப் பெருமைமிக்க விடயமாகும். இதற்காகத் தொடர்ச்சியாக உழைத்த மாநகரசபையின் கௌரவ முதல்வர்கள், ஆணையாளர்கள் மற்றும் சைவ சமய விவகாரக்குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு மண்ணினதும் ஒரு சமயத்தினதும் பெருமைகளைப் பதிவு செய்து வெளிப்படுத்துகின்ற இம்மலர், எதிர்காலத் தலைமுறைகளுக்கான வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணமாகும். எமது சமயம், பண்பாடு, வரலாறு மற்றும் சமூகப் பெருமைகளைத் தாங்கியதாகத் தொடர்ச்சியாக இம்மலர் வெளிவருவது பாராட்டுக்குரியது. இம்மலரில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பாக ஆய்வுரைகளையும் வெளியீட்டுரையையும் வழங்கியவர்கள் சிறப்பாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாண மாநகரசபையின் சைவ சமய விவகாரக்குழு பல்வேறு சிறப்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வருடம் ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்படும் தகைசார் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் ச. மனோன்மணி தம்பதியினர் உண்மையிலேயே இவ்விருதுக்குத் தகுதியானவர்கள். யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழ்ப் பேராசிரியராகவும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளராகவும், சமூக அக்கறையுடன் பணியாற்றுபவராகவும் திகழும் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களையும் அவரது துணைவியாரையும் கௌரவிப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகரசபை நல்லூர் மண்ணில் நீண்டகாலமாகத் தனது பணியைத் தொடர்ந்து ஆற்றிவருவது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும். புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் அங்கு செயற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற போதிலும் நல்லூர் முருகப்பெருமானின் அருளால் அவரது புனித மண்ணிலேயே நீண்டகாலமாகத் தனது பணிகளை முன்னெடுத்து வருவது தனிச்சிறப்புக்குரியதாகும். நல்லூர் உற்சவ காலத்தைப் பார்க்கும்போது, முழு யாழ்ப்பாணமும் புனிதமடையும் காலமாகவே அதனை நாம் உணர்கின்றோம். அந்தத் தெய்வீகச் சக்தியோடு வாழுகின்ற பாக்கியம் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த எமக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் நாம் அனைவரும் பாக்கியசாலிகள்” எனத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
இந் நிகழ்வில் வரவேற்பு நடனத்தை செல்வி தி. பிரதிக்க்ஷா வழங்கியதுடன், வரவேற்புரையை பிரதி ஆணையாளர் திருமதி தவலோஜினி நிரோஷ் நிகழ்த்தினார். தொடர்ந்து, ஆசியுரைகளை வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் (பீடாதிபதி, விநாயகான குருபீடம்) மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான ‘செஞ்சொற்செல்வர்’ ஆறு. திருமுருகன் ஆகியோர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ‘நல்லைக்குமரன் மலர் 34’ வெளியிடப்பட்டதுடன், அதன் முதற்பிரதி கௌரவ ஆளுநர் அவர்களால் வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. ரமணராஜா மலர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து பேராசிரியர் ச. முகுந்தன் ஆய்வுரையை வழங்கினார். மேலும், இந் நிகழ்வில் விருந்தினர் உரைகள், ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவித்தல், ஏற்புரை, மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தகைசார் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் ச. மனோன்மணி தம்பதியினர் ‘யாழ் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் நிறைவில் சைவ சமய விவகாரக்குழுவின் செயலாளர் திரு. சோ. கணேசநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம், பிரதி முதல்வர் கௌரவ இ. தயாளன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபரும் ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ எஸ். லலீசன், வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு. நா. விஜயசுந்தரம், முன்னாள் மாநகர ஆணையர் திரு. வே.பொ. பாலசிங்கம், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. தணிகாசலம்பிள்ளை உள்ளிட்டோர், சமயப் பெரியார்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
1 2 3 4 6 7 5 9 11 12 13 14 14 15 16 17 17 18