• அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 24 நாலன்புரி நிலையங்களில் வசிக்கும் 410 குடும்பங்களும் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசித்து வெளியேறிய 310 குடும்பங்களுமாக மொத்தம் 720 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளித்தார். இவை உடனடியாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் கொரோனா தடுப்புச் செயலணியின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடக நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அரச உதவித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி பயனாளிகளான 74,458 குடும்பங்களுக்கும் சமுர்த்தி உதவிக்காக காத்திருக்கும் 9,427 குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கு மேலதிகமாக 36,000 சமுர்த்தி பயனாளிகளுக்கான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயனாளிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. முதியோர் உதவி வழங்கல் திட்டத்தின் கீழான 18,371 பயனாளிகளுக்கும் முதியோர் உதவிக்காக காத்திருப்போர் என்ற அடிப்படையின் கீழ் 2,856 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் 7,359 பயனாளிகளுக்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 385 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் இதுவரை பகிரப்பட்டுள்ளன. இதற்காக 564 மில்லியன் ரூபா நிவாரண உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று ( 30.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகஇ நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் பணியை பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியிருடன் இணைந்து பொலிஸார் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







