யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக விதாதா வளநிலையத்தினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பயிற்சிநெறி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (09.01.2024) காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை முழுவதும் ஐந்து மாவட்டங்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பயிற்சி நெறி முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன. இவ் ஐந்து மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இப் பயிற்சி நெறியில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மாற்றுத் தொழிலொன்றுக்கான (மரவேலை,சிகையலங்காரம், மின் பயிற்சி, நீர் குழாய் பொருத்துதல், வர்ணம் பூசுதல்) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப் பயிற்சிநெறி மூலம் யாழ் மாவட்ட இளம் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில் திறன், தொழில் வாய்ப்பு மற்றும் வருமானத்தினை அதிகரிக்க முடியுமென குறிப்பிடப்பட்டன.
மேலும் முச்சக்கர வண்டி சாரதிகள் இப் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை 18.01.2024 ஆம் திகதிக்கு முன்பாக கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்கமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.A.லக்கதாஸ் மற்றும் உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், முகாமையாளர்(VTA), NEDA பிரதிநிதி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட விதாதா இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் (04.01.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களும் வழிகாட்டல்களும் தொடர்பான முன்னேற்றம், மாவட்ட ஒருஙகிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னேற்றமும் முக்கிய தீர்மானங்களும் மற்றும் புதிய முன்மொழிவுகளும் தற்போதைய நிலைமையும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தனகௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ தருமலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.




முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் “ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப்பருவம்” எனும் தொனிப்பொருளினை மையமாகக் கொண்டு அரச, பகுதியளவு அரச (Semi Government ) மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றும், ஓய்விற்கு தயாராகும் 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (14.12.2023) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உத்தியோகத்தர்கள் ஓய்விற்குத் தயாராகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் சமூகமயமாதல் மற்றும் முதுமைப் பருவத்தினை செயற்திறனாக எதிர்கொள்வதனை இலக்காகக்கொண்டு இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் "ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம்" எனும் ஓய்வூதிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும், “ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பெற்றுக்கொள்ளும்போது நபரின் சுய கோவை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதா?” என்பது தொடர்பாக தொழிற்திணைக்கள உதவி ஆணையாளர், திரு.அ.அ.தனேஷ் அவர்களும், “ஓய்வு காலத்தில் உடலியல் மற்றும் உளவியல் நலம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை உள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. எஸ்.சிவதாஸ் அவர்களும், “ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும்போது நபரின் சுய கோவை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதா?” என்பது தொடர்பாக யாழ் பிரதேச செயலக கணக்காளர், திரு.க.சிறீதரன் அவர்களும், "திட்டமிடப்பட்ட முதுமைப் பருவம்" ஓய்வினைக் கழிப்பதில் முதியோர் சமூகமயமாதலுக்கு செயற்திறனாக முகங்கொடுக்க வழிகாட்டல் தொடர்பாக மாவட்ட செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.ஸ்பெல்மன் பாலகுமாரி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர் உட்பட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், வலயக் கல்வி அலுவலகம், விவசாய மற்றும் கமநலசேவை காப்புறுதிச் சபை ,தென்னை பயிர்ச்செய்கை சபை ,நீர்ப்பாசனத் திணைக்களம் ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் ,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ,பனை அபிவிருத்தி சபை ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,இலங்கை மின்சார சபை ,பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபை , இலங்கை போக்குவரத்துச்சபை , சமூக சேவைகள் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை , கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆகிய திணைக்களங்களைச் சார்ந்த 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (13.12.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சஞ்சீவ விமலகுணரட்ன அவர்கள் பங்குபற்றியதோடு, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், 12 சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், 23 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதில், 2023 ஆம் ஆண்டுக்குரிய ஆயிரத்து நூறு மில்லியன் ரூபாவிற்கான மூன்றாம் காலாண்டுத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டன.





