யாழ்ப்பாண மாவட்ட டெங்கு நோய் அபாயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (23) பிற்பகல் மூன்று மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தற்போது யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புக்கள் இடம்பெறுகிறது. யாழ் மாவட்ட நகர்புறங்களில் டெங்கு நோய் அபாயம் அதிகமாகவுள்ளது. இவை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற சனிக்கிழமை அன்று (27.01.2024) யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டு நீர் தேங்கும் இடங்களினை கண்டறிந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு திறக்கப்படாத கடைகள், ஸ்தாபனங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
யாழ் மாவட்ட நகர்புறங்களில் டெங்குநோயை ஒழிப்பதற்கு வியாபார நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும். குறிப்பாக வியாபார நிலையங்கள் கழிவுகளை முறையாக அகற்றவேண்டும். யாழ் மாவட்ட வியாபார நிலையங்கள் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக சங்கத் தலைவர், மாநகர சபை ஆணையாளர்,சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர், பிரதேச சபை, வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர்திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (23.01.2024) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் மாசி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பொலிஸ் பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஒலி, ஒளி வசதிகள், அலங்காரங்கள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், விருந்தினர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையின் ஒத்துழைப்பு பிரதானமானதெனவும், இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய தூதுவர் ராம் மகேஸ், இந்திய துணைத் தூதுவர் நாகராஜன் இராமசுவாமி மற்றும் வட மாகாண கடற்படை கட்டளை தளபதி, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திணைக்கள தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்(நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை), முப்படையினர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக IOM நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17.01.2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் இறங்கு துறைமுக மீள்கட்டுமாணம், வீதிப் புனரமைப்பு, வீட்டுத் திட்டங்கள், உள்ளக விளையாட்டு மைதானம் அமைத்தல், போதைப் பொருள் தடுப்பு புனர்வாழ்வு முகாம் அமைத்தல், உள்ளூர் கைத்தொழிலை ஊக்குவித்தல், படகு சேவையின் விஸ்தரிப்பு மற்றும் விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்திப் பணிப்பாளர், இணைப்பாளர் (IOM), மாவட்ட இணைப்பாளர் (IOM) மற்றும் இழப்பீடுகளுக்கான மாவட்ட உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 18.01.2024 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் மேம்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
தொழில் முயற்சியாளர்களுக்கான கடனுதவி, சந்தை வாய்ப்பு, தரச் சான்றிதழ், நிதி மூலம், தொழில் நிலையங்களை பதிவு செய்தல் முதலான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், யாழ் மாவட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை விருத்தி செய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், தொழில்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (16.01.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவரும் பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான திரு.இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.





