யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் நான்காம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பா.ஜெயகரன் (காணி) அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.12.2025) பி.ப 2.30 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், பெற்றோரை இழந்த சிறுவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள், பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், சிறுவர் தொடர்பான பிரதேச மட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இக்கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர்கள் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், நன்னடத்தை அலுவலர்கள் மாவட்ட, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உளவள துணை இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.12.2025) மு.ப 09.00 மணிக்கு எழுவைதீவு கிராமிய செயலகத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவுக்கு அமைவாக, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவையினை ஒரே இடத்திலே வழங்குவதனை நோக்காக கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக, கிராம அலுவலர்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக, கிராம அலுவலர்களால் விரிவாக அரசாங்க அதிபருக்குதெரிவிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட கிராம அலுவலர்கள் தமது பிரதேச செயலக ரீதியாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், தீர்வுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான தங்களுடைய அதிருப்தி நிலைமையினையும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.







