யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (14.04.2024) காலை 9.15 மணி முதல் காலை 11.30 மணிவரை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 05.04.2024 அன்று காலை 08 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் நிறஞ்சன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 28 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களிடம் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போதுஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி நல்வழிப்படுத்த வேண்டுமெனவும், வட மாகாண இளைஞர் யுவதிகளை விளையாட்டுத் துறையில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மாகாண உடற்பயிற்சி உதவிக் கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம், தீவகம், வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்ட செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தினம் - 2024 யாழ் மாவட்ட செயலக
வளாகத்தில் 26.03.2024 காலை 9.30 மணிக்கு “அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” என்னும் தொனிப்பொருளில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி.தி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட மனிதவள முகாமைத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.சி.தேவரஞ்சினி அவர்களும், கௌரவ விருந்தினராக தடகள வீராங்கனை திருமதி.சிறிசெயானந்தபவ அகிலத்திருநாயகி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் உள்ளூர் பெண் முயற்சியாளர்களின் விற்பனைக்கூடங்கள் விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது மாவட்ட
புள்ளிவிபர அடிப்படையில் பார்க்கும் போது மாவட்ட பிரதேச நிர்வாகக் கட்டமைப்பில் சுமார் 60 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படுகின்றார்கள். அத்தோடு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதிலும் பெண்களே அதிகம் காணப்படுகின்றார்கள்.
ஒரு பெண்ணிற்கு வழங்கப்படும் கல்வி என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வழங்கப்படும் கல்வியாக அமையும் என்றும் இதன்போது தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே விருந்தினர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள், சிறந்த பெண் சமூக மட்ட அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன பிரதிநிதிகள், பெண் முயற்சியாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் 28.03.2024 அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
16.02.2024 இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் ஆராயப்பட்டன.
மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புக்காக அடையாளம் காணப்பட்ட நிலங்கள், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு மற்றும் திருத்தப்படவேண்டிய மீன்பிடி துறைமுகம், காணி விடுவிப்பு, சூரியகல வீட்டுத்திட்டம், பேரூந்து சேவை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்தல், தென்னையில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்கம், வீடற்றவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கல், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலைய மீதமுள்ள மக்களின் காணிகளை மீள வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் வட மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், வட மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,இராணுவ, பொலிஸ், கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.





