

குறைந்த வருமானம் மற்றும் சமுர்த்தி குடும்ப அங்கத்தவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கும் ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பினை பெற்று தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்குமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து ஜப்பான் மொழிப் பயிற்சி நெறி வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஜப்பான் மொழி பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜப்பான் நாட்டு இலங்கைக்கான தூதுவர் Mr. Mizukoshi hideaki அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக (2023.08.11) இக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் ஜப்பான் மொழிப்பயிற்சி நெறி மையம் ஆரம்பிக்கத் தேவையான நடைமுறைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களின் முன் மொழிவுடன் கலந்துரையாடப்பட்டதுடன், ஜப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு தொடர்பான விளக்கம் (பேராசிரியர். முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ) அவர்களால் வழங்கப்பட்டது.






