தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (17) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்ளை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப்பின்னர் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும் அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்தும் அதேவேளை பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டன.
மேலும் தொடர்ச்சியாக ஏழுநாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தவும் அறநெறிகல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களை சமூக விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் முகமாகவும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப வகுப்புக்களை மீள ஒழுங்குபடுத்தி செயற்படுமாறும் அரசாங்க அதிபரால் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் மேலும் பாடசாலை நேரங்களுக்கு புறம்பாக மேற்படி தீர்மானங்களுக்கு கட்டுப்படாத குழு வகுப்புக்கள் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் யாழ் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகமும் இணைந்து நடாத்தும் ஆடிப்பிறப்பு நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக்கழக தலைவரும் பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (17.07.2023) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலக நலன்புரிக் கழக போசகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
ஆடிப் பிறப்பு நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வேலும்மயிலும் சேந்தன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.








