USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் (08.09.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வழங்கிவைத்தார்.
 
இத் தொழில் உபகரணங்கள் உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
 
இந் நிகழ்வில் சங்கானை பிரதேச செயலாளர், IDB நிறுவன வடமாகாண பணிப்பாளர், IDB நிறுவன யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர், USAID நிறுவன பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

வெதுப்பக உற்பத்திப் பொருட்களுக்கான விலை தொடர்பான கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை  மகேசன் அவர்களின் தலைமையில் 08.09.2022 காலை 11 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், உதவிக் கூட்டுறவு ஆணையாளர், பிறிமா பிராந்திய முகாமையாளர், செரண்டிப் மா விநியோக பிரதிநிதி, பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர், பேக்கறி உரிமையாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில்  வெதுப்பக உற்பத்திகள் மற்றும் அவற்றின் இடர்பாடுகள், உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நுகர்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள், விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெதுப்பகங்களுக்கான எரிபொருள் விநியோகம், வெதுப்பகங்களுக்கு சரியான பொறிமுறையில் மா விநியோகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டு விலை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மூலம் கண்காணித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், வெதுப்பக உரிமையாளர்களால் பாணின் விலையை இரு நூறு ரூபாவிற்கு விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டதோடு, வெதுப்பக மா விநியோகத்தை சீராக தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் "முற்கரை ஒதுக்கீட்டு அரச காணிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தல்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 07.09.2022 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அடையாளப்படுத்தப்பட்ட கரைவலைப்பாடுகளுள் ஒன்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களால் ஒரே காலப்பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் போது குறித்த காணிக்கான ஆவணம் வழங்கும் நபரை தெரிவு செய்தல், ஏற்கனவே அமைக்கப்பட்ட வாடிகளுள் தற்காலிக குடில்கள், சீமெந்து தளத்தாலானவை, சுவர்கள் பகுதியளவில் சீமெந்தால் கட்டப்பட்டவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும்,ஏற்கனவே அமைக்கப்பட்ட வாடிகளுக்கு அனுமதி வழங்கும் விஸ்தீரணம், கடலட்டை வளர்ப்பாளர்களால் கோரப்படும் வாடிகளுக்கான அனுமதி வழங்கல் மற்றும் அனுமதிக்கும் விஸ்தீரணம், அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்டு மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடங்கள் அடங்கலான காணியை வழங்குதல் தொடர்பான நடவடிக்கை மற்றும் கரையோரப் பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அரச, தனியார் கட்டடங்கள் அரச காணிக்கட்டளை சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கையெடுக்கும் போது கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி பெறல், பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத அரச காணிகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசியக்கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக "நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியானவர்களை கண்டறிதல்" தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 06.09.2022 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் 2022 ஆம் ஆண்டில்  24 ஆம்  இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தில் 7(1) பிரிவின் பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான அனைத்து நபர்களையும் கண்டறிய அரசு தீர்மானத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், அரசின் மூலம்  செயற்படும் சமுர்த்தி, முதியோர், அங்கவீனர், சிறுநீரக நோய் மற்றும் பொது நிதி போன்றவற்றிலோ அல்லது நலன்புரி நன்மைகள் போன்றவற்றின் கீழ் ஏற்கனவே பயன்பெறுபவராக இருப்பின் அல்லது பயன்பெற தகுதியானவர்கள் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் நிரந்தரமாக வசிக்கும் வசிப்பிடத்துடன் தொடர்புடைய கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஊடாக பிரதேச செயலகத்திற்கு 2022.09.30 ஆம் திகதிக்கு முதல் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், IOM நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில் 06.09.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், IOM நிறுவன இணைப்பாளர், இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பயிற்சி நெறிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
கொவிட் நிலமைகாரணமாக வெளிநாடுகளிலிருந்துவந்து வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் மதிப்புக்குரிய அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக IOM நிறுவனத்தினால் இப்பயிற்சி நெறி வழங்கப்பட்டுள்ளது.