அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் எண்ணக்கருவிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியத்தொகை, குறைந்த வட்டியிலான கடன் வழங்கும் ஆரம்பநிகழ்வு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (2022.02.14) காலை பத்து மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ்.நகர் கிழக்கு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதுடன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ்ப்பாண பிரதேச செயலர், மாவட்ட சமுர்த்திக் கணக்காளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும், நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்’ ஒன்றை பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஸ்தாபித்திருந்தார்.
அதனடிப்படையில், சிறிய அளவிலான உர உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்தல், தரத்தினை உயர்த்துதல் மற்றும் ஒருங்கமைத்தல் வேலைத்திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலானது அனைத்து மாவட்டங்களையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமை (11.02.2022) காலை 10.30மணியளவில் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது.
தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சிறுவர் பாதுகாப்புத் திட்டம் தயாரித்தல்” தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11) காலை 9.30- மாலை 4.00 மணி வரை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது வடமாகாணத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்றதோடு,இதில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இனங்கண்டு அப்பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பாரம்பரியமற்ற தொழிற்பயிற்சி சான்றிதழ்தாரர்களுக்கு தொழிலினை ஆரம்பிப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தொழிற் பயிற்சித்துறையில் பாரம்பரியமற்ற கற்கை நெறிகளை பயின்ற தேசிய தராதர தகைமை (NVQ)சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான OXFAM ம் இணைந்து 11 பயனாளிகளுக்கு அவர்களின் தொழிலை ஆரம்பிப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நூல்கள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், ஸ்ரீபரமானந்தா சிறுவர், முதியோர் இல்லத்தின் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான, முன்னாள் வடமாகாண பிரதமசெயலாளருமான ஆ.சிவசாமி அவர்களும் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எஸ்.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகர்களும் கலந்து கொண்டனர்.





