யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (16.01.2023) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவர் நிர்மல் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் தமிழர்களுடைய பண்பாடு, விழுமியங்களை எடுத்துக் கூறி பல தத்துவங்களை எடுத்தியம்பும் வகையில் இந்த தைப்பொங்கல் நிகழ்வு அமைந்துள்ளதாக குறிப்பிட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அலுவலகத்தை ஒரு வீடாக அல்லது ஒரு குடும்பமாக நினைத்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற நேக்கில் இன்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (13.01.2023) வெள்ளிக்கிழமை பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் தந்தை செல்வா அரங்கில்" காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் திரு.மு.நந்தகோபாலன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ் சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் திரு .தி.லக்ஷன், யாழ் அரிமாக்கழகம் தலைவர் லயன் கு.ஜெயந்தன், நல்லூர்க்ஷஅரிமாக்கழகம் தலைவர் லயன் ர.பாலரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக பாதுகாப்பு சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களிற்கான பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 100 மாணவர்கள் 5,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையான புலமைப்பரிசிலிற்கான காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (12.01.2023) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலாக இது அமைந்தது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.சி.அமல்ராஜ் , சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் 110 வறிய குடும்பங்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் (12.01.2023) வழங்கிவைக்கப்பட்டது.நிர்த்தனகுமாரன் ராஜி குடும்பத்தினர் மற்றும் திருமதி ஹெலன் தேவராஜன் ஆகியோரின் நிதி உதவியில் இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உதவி மாவட்ட செயலாளர், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தியில் இளைஞர்களை வலுப்படுத்தி ஈடுபடுத்தல் தொடர்பான ஒருங்கிணைந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களின் தலைமையில் (12.01.2023) காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்தரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ றொசான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ றோஹன திஸாநாயக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரும் முன்னாள் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தியில் இளைஞர்களை ஈடுபடுத்தி கிராமிய, மாவட்ட, மாகாண ரீதியாக வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய விடயங்கள்,தேசிய பொருளாதாரத்திற்கான வலுவான இளைஞர் தொழில்முனைவு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.